India

இரட்டை குடியுரிமை மறுப்பு : ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை விவகாரத்தில் நாடகமாடியதா எடப்பாடி அரசு?

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயரும் இஸ்லாமியர் நீங்கலாக மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதேபோல, இலங்கையில் இருந்து அகதிகளாக குடியேறும் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கப்படுகிறது.

ஆகையால், இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக உள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க எம்.பி. கோகுலகிருஷணன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியலமைப்பு 9 மற்றும் 1955 குடியுரிமை சட்டப்பிரிவு 9ன் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றபோது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பரிசீலிக்கப்படும் என அமித்ஷா கூறியதாக நமது நாளிதழில் குறிப்பிடப்பட்டது.

அதேபோல, கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் முதல் நாளன்று ஆளுநர் உரையின் போதும், இரட்டைக் குடியுரிமை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தும் என பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது இரட்டை குடியுரிமை வழங்க முடியாது பா.ஜ.க அரசு திட்டவட்டமாக தெரிவித்திருப்பது, மக்களை ஏமாற்ற கண்துடைப்புக்காகவே எடப்பாடி அரசு கோரிக்கைகளை முன்வைத்ததா எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Also Read: ’ஆதார், பாஸ்போர்ட் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது’ - சாமானியர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிய பா.ஜ.க