India

புதிய வரி விதிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆபத்து : பொருளாதார நிபுணர்கள் கண்டனம்!

2020-21ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அரசியல் கட்சியினரும், பொருளாதார நிபுணர்களும் விமர்சித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

இதற்கிடையில் மத்திய அரசின் புதிய வருமான வரி அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் மக்களுக்கு இருக்கும் சேமிப்பு பழக்கத்தால் அவற்றில் இருந்து எப்பாடுப்பட்டாவது மீண்டும் வருவார்கள்.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறையால் அந்த சேமிப்பு பழக்கம் அழிவது மட்டுமல்லாமல் மக்களின் வருமானம் மொத்தமும் செலவிடும் வகையிலேயே அமையும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பா.ஜ.க அரசு அறிவித்துள்ள வரி வரம்பு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வரி விதிப்பில் மேற்கொண்ட திருத்தங்களால் வரி வசூலிக்காத நாடுகளான அரபு நாடு உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 182 நாட்கள் வெளிநாடுகளில் வசித்தால் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கருத்தப்பட்டனர்.

தற்போது அதிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 240 நாட்கள் வெளிநாட்டில் வசித்தால் மட்டுமே வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவார் என்றும், 120 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்துவிட்டால் அவர் மத்திய அரசின் வருமான வரி வரம்புக்குள் அடங்குவார் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், இந்த மோசமான நடவடிக்கை தேவையற்றது என்றும், இதனடிப்படையில் தங்கும் நாட்களை கணக்கிட்டால் பலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Also Read: தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” - ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!