India

“நாடு கடத்துங்கள்; இல்லையேல் கருணைக் கொலை செய்துவிடுங்கள்”- உனா தாக்குதலுக்கு ஆளான தலித் இளைஞர் உருக்கம்!

குஜராத் மாநிலம் உனாவில் இந்துத்வா கும்பலால் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் ஒருவர், “எங்களை குடிமக்களாக கருத முடியவில்லை என்றால் நாடு கடத்தி விடுங்கள்” என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக, சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இந்துத்வ மதவாத கும்பல் தொடர்ந்து வன்முறையைக் கையாண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மதவாத கும்பலின் தாக்குதலில் பலர் படுகாயமடைவதோடு, உயிரையும் இழக்கின்றனர்.

அப்படி கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி குஜராத் மாநிலம் உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை இத்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் சர்வயா மற்றும் அவரது சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மற்றவர்களை அரை நிர்வாகமாக காரின் பின்புறத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் இதுவரை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சர்வயா இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “உனா தாக்குதலுக்குப் பிறகு எங்களது அடிப்படை உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டோம். நாங்கள் தாக்கப்பட்டபோது மாநில அரசு சிறப்பு நீதிமன்றத்தையும் சிறப்பு வழக்கறிஞரையும் நியமிக்கும் என்று உறுதி அளித்தது.

Also Read: தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல் : வைரலாகும் வீடியோ!

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு விவசாய நிலம், வீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிப்பதாக அப்போதைய முதல்வர் ஆனந்தி பென் படேல் தெரிவித்தார். ஆனால் இதுவரை அவரோ அல்லது மாநிலத்தின் எந்த அரசாங்க பிரதிநிதியோ இதுவரை எங்களைச் சந்திக்கவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

எங்களை இந்த அரசாங்கம் குடிமக்களாக கருதமுடியவில்லை என்றால், எங்கள் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு, எங்களை பாகுபாடு காட்டாத வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தங்களின் உரிமைகளுக்கு ஜனாதிபதியால் உத்தரவாதம் அளிக்க முடியாமல் போகுமானால் எங்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கவேண்டும். நீதி கேட்டு நாங்கள் அளிக்கும் வேண்டுகோளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றால், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்” என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.