India

“ஒரே மாதத்தில் 77 குழந்தைகள் பலி” : ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்: - அதிர்ச்சி தகவல்!

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற பகுதியில் செயல்பட்டுவரும் ஜெ.கே.லோன் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள், மருத்துவமனையை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து விசாரித்தன. நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், ஜெ.கே.லோன் மருத்துவமனையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,198 குழந்தைகள் பிறந்து உயிரிழந்துள்ளன என்பது தெரியவந்தது.

அதேபோல் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, கடந்த கடந்த 48 மணி நேரத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றிற்கு 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாகவும், டிசம்பர் 23, 24-ம் தேதிகளில் மட்டும் பிறந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பச்சிளம் குழந்தைகளின் இந்த உயிரிழப்பிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, தொற்று பாதிப்புகளை முறையாக கண்காணிக்காதது, போதிய மருத்துவ உபகரணங்கள் இருந்தாலும் மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவையே உயிரிழப்பிற்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. உடல்நிலை மிக மோசமான நிலையில் குழந்தைகள் கொண்டு வரப்படுவதே உயிரிழப்பிற்கு காரணம் என மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. மருத்துவமனையின் இந்த காரணத்தை ஆய்வுக்குழு ஏற்க மறுத்துவிட்டதால், இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து அடுத்தக்கட்ட விசாரணை நடத்த ஆய்வுக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.