India

“நெருப்புடன் விளையாட வேண்டாம்” - பா.ஜ.கவை எச்சரிக்கும் மம்தா பானர்ஜி!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக கண்டன பேரணி நடத்தி வருகிறார். இன்று கொல்கத்தாவில் ராஜா பஜார் பகுதி முதல் முல்லிக் பஜார் பகுதி வரை மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராடினால், அவர்களை பா.ஜ.கவினர் மிரட்டுகின்றனர். 18 வயதைக் கடந்தவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அவர்கள் எங்காவது போராட்டம் நடத்தினால் அங்கு பா.ஜ.க-வுக்கு பாதிப்பு ஏற்படும். பா.ஜ.கவினர் நெருப்புடன் விளையாடுகின்றனர்.

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன். போராடும் மாணவர்கள் யாருக்கும் அச்சப்படக் கூடாது. ஜனநாயக வழியில் போராட்டத்தைத் தொடரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: "நான் உயிரோடிருக்கும் வரை உங்களால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது” - மம்தா பானர்ஜி சூளுரை!