India

"மதத்தையும் அரசியலையும் கலந்தது எங்கள் தவறு” - உத்தவ் தாக்கரே உருக்கம்!

பா.ஜ.கவால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமானது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து உருக்கமாகப் பேசியுள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, “எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு மராட்டிய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. போராட விரும்புபவர்கள் அமைதியான முறையில் போராடலாம்.

அரசியல் ஒரு சூதாட்டம் என்பதை இப்போது நாங்கள் உணர்ந்திருக்கிறோம். மதத்தையும், அரசியலையும் கலந்ததில் நாங்கள் நிறைய துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம்.

இப்போது அமைந்திருக்கும் மூன்று கட்சி கூட்டணி அரசு தான் எங்கள் பலம். மூன்று கட்சிகளும் மனதால் இணைந்து அமைத்திருப்பது புல்லட் ட்ரெய்னில் செல்வோருக்கான கூட்டணி அல்ல; ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வோருக்கான கூட்டணி.” எனப் பேசியுள்ளார்.

Also Read: LIVE | #CAA : ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி - தரதரவென இழுத்து கைது செய்த போலிஸ்!