India

சிறுமி பாலியல் வன்கொடுமை; 3 கொலைகள் - உன்னாவ் வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குல்தீப்புக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 19 அன்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் செங்கார் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியை லாரி ஏற்றிக் கொல்லவும் முயற்சி நடந்தது. இதில் அவரது உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக குல்தீப் செங்கார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை இன்று அளித்தது.

அந்த தீர்ப்பில், “உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்கார்க்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ. 25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அபராதத் தொகையை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் எனவும், அந்த அபராதத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேஎண்டும் என சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: “பாலியல் வன்முறைகளின் தலைநகரமான உன்னாவ்” : 11 மாதங்களில் 185 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு!