India

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொல்ல முயற்சி : உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 15 வயது பள்ளி மாணவி ஒருவர் சி.ஆர்.பி.எப் வீரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றவாளிகள் எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக உன்னாவ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். மேலும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு போலிஸாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளி மற்று அவரது நண்பர்கள் 5 பேர் நேற்று வயல்வெளிக்குச் சென்ற பெண்ணை மறித்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த பொதுமக்கள் அப்பெண்ணை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவணையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து 90% பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை தற்போது மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரை போலிஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் போலிஸார் முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த இளம்பெண்ணுக்கு இதுபோல நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஜாமீனில் வெளிவந்து குத்திக் கொலை செய்த குற்றவாளி