India

அடுத்தடுத்து விலையை ஏற்றி வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் : ஏன் ? எதற்கு ?

இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களை, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முந்தி தொலைத்தொடர்பில் தனது தடத்தைப் பதித்தது.

இரு வருடங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டா சேவையால் மற்ற நிறுவனங்களும் தங்களின் விலையை குறைத்தனர். இதனால் அந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன. இது இந்திய டெலிகாம் உலகில் மிகப்பெரிய விலைக்குறைப்பு நடவடிக்கைக்கு வித்திட்டது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத் திட்டத்தை அடுத்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தின. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் 47% வரை தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது.

அதனையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை 40% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக,‘NEW ALL IN ONE PLANS’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் தனது தொலைத்தொடர்பு சேவைக் கட்டணத்தை 40% வரை அதிகரித்து அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா பயன்பாட்டை 300% வரை அதிகரித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம், நாள்தோறும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் அன்லிமிடெட் SMS என இருக்கும் சலுகை திட்டத்திற்கு 222 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுவே மூன்று மாதம் என்றால் 444 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு வருகின்ற 6-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல ஏர்டெல் நிறுவனமும் தனது பேக்குகள் மீதான விலையை 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள்?- அதிர்ச்சி தகவல்!