India

நாட்டையே உலுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - ஒற்றை ஆளாக போராட்டத்தில் இறங்கிய இளம்பெண்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அமைதிப் போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பா.ஜ.க ஆட்சியில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

சமீபத்தில் ராஞ்சியில், 25 வயதான சட்ட மாணவி கும்பல் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டியலின கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் பெருகுவதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் தனிமைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் அனு துபே, இன்று காலை நாடாளுமன்ற சாலைக்கு வந்து நடைபாதையிலேயே அமர்ந்தார். பின்னர், “என் சொந்த நாட்டில் நான் ஏன் பாதுகாப்பாக உணரமுடியவில்லை?'” என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்தியவாறு அவர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அவரிடம் போராட்டத்தைக் கைவிடும்படி போலிஸார் வலியுறுத்தினர். ஆனால் அவர் மறுக்கவே அவரை போலிஸார் கைது செய்தனர். அனு துபேபின் முகம், அச்சத்துயர் நிறைந்ததாக இருந்தது அப்பகுதியில் இருந்தோரை கலங்கச் செய்தது.

தகவலறிந்த டெல்லி மகளிர் ஆணையக்குழு காவல் நிலையத்திற்கு வந்த பிறகு போராடிய இளம்பெண் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளுக்கு எதிராக இளம்பெண் அனு துபே போராட்டத்தில் ஈடுபட்டது கவனம் பெற்றுள்ளது.

Also Read: கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற இடத்தில் மற்றொரு பெண்ணின் எரிந்த சடலம் - ஐதராபாத்தில் தொடரும் கொடூரம்!