India

“சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை நிறுவிடவேண்டும்” - மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை!

“உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடவேண்டும்” என மாநிலங்களவையில் வைகோ எம்.பி., வில் எம்.பி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

ஆனால், தென்னிந்திய மக்கள், உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்கறிஞர்கள் கட்டணம் போன்றவை, எதிர்கொள்ள முடியாத கேள்விகள்.

மேற்கண்ட காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்சநீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கின்றன.

உச்சநீதிமன்ற மேல் முறையீடுகளில், வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக, ஆகக்கூடுதலான வழக்குகள், தென் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன.

எனவே, உச்சநீதிமன்றத்தில் நிரந்தரக் கிளையை, தென்இந்தியாவில் நிறுவினால் மட்டுமே, நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்கறிஞர்களுக்கும் வசதியாக அமையும்.

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.

2018 மே 4 ஆம் நாள் கணக்கின்படி, தற்போது உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.

எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

தக்க நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற அதிகாரத்தின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேசவேண்டியது இல்லை; கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. அவர் தாமாகவே முடிவெடுத்துச் செயல்படலாம். ஆனால் அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

எனவே, உச்சநீதிமன்றக் கிளையை தென் இந்தியாவில், சென்னையில் நிறுவிட வேண்டும்.” என வைகோ பேசினார்.

வைகோவின் கோரிக்கைக்கு தி.மு.க எம்.பி., வில்சன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து கோரிக்கை வைத்த பி.வில்சன் எம்.பி., “இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் வலிமையைக் கூட்ட முடியும். 133 கோடி மக்களுக்கு 34 உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற அளவு அதிகரிக்கப்படவேண்டும்” என வலியுறுத்தினார்.