India
சட்டவிரோதமாக தேர்தல் பத்திர விற்பனைக்கு அறிவுறுத்திய பிரதமர் அலுவலகம் : பா.ஜ.க முறைகேடு அம்பலம்!
கறுப்புப் பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு தேசிய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாக ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது பா.ஜ.க அரசு. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு 2,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொடுக்கமுடியும். அதற்கு மேலான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று அரசியல் கட்சிக்குத் தெரியாது. ஆனால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.
இந்த விதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் ஆகியவை ஆட்சேபனை தெரிவித்தன. கடும் சர்ச்சையை ஏற்படுத்திய விதிகளை அறிவித்த பா.ஜ.க அரசே அவற்றை மீறும் வகையில் உத்தரவைப் பிறப்பித்து முறைகேட்டுக்கு வழிவகுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம், தேர்தல்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கை சட்டப்பூர்வமாக்கியது. ரகசியமாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வழிவகை செய்ததன் மூலம் வெளிநாட்டுப் பணம் அரசியல் கட்சிகளிடையே புழங்க வழிவகுத்தது பா.ஜ.க அரசு.
மார்ச் 2018ல் முதன்முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை அளித்ததில் பெறப்பட்ட தொகையான 222 கோடி ரூபாயில், 95 சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் எம்.பி-யுமான ராஜிவ் கவுடா கூறுகையில், “தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பு பெயரளவில் மட்டுமே ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கி பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க அரசு வெளியிட்டதால் அவற்றை ரத்து செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!
-
‘சமூகநீதி நாள்’ - அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்புகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!