India

“மோடி அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்” : ‘நோமுரா’ எச்சரிக்கை!

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாகச் சரிந்து வருகிறது.

குறிப்பாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு முதலே ஒவ்வொரு காலாண்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2019-20ம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மிக மோசமாக 5.6 சதவிகித வளர்ச்சியையே இந்தியா கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையில், சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் தேங்கிக் கிடப்பதனால் ஒவ்வொரு மாதமும், இந்தியாவிற்கான ஜி.டி.பி குறித்து தங்களது கணிப்பை குறைத்து வருகின்றன.

முன்னதாக உலக வங்கி, ஐ.எம்.எப், பிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் முந்தைய கணிப்பை குறைத்துக்கொண்ட நிலையில் தற்போது, ஜப்பானைச் சேர்ந்த ‘நோமுரா’ என்ற நிறுவனமும் இந்தியாவின் ஜி.டி.பி குறித்த மதிப்பீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது.

2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 5.7 சதவிகிதமாக இருக்கும் என்று இதற்கு முன்னர் ‘நோமுரா’ நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் தற்போது, அதனை 4.9 சதவிகிதமாக குறைத்துள்ளது.

Also Read: “5.6% குறைந்த ஜி.டி.பி”: மோடி ஆட்சியில் பொருளாதார மந்தநிலை நீண்ட காலம் நீடிக்கும்: - மூடிஸ் எச்சரிக்கை!

அதுமட்டுமின்றி நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என மோடி அரசு முடிவு எடுத்திருந்த நிலையில், இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை குறித்த தனது கணிப்பை 3.7 சதவிகிதமாக நோமுரா நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மேலும், கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் மோடி அரசின் முடிவால், அரசின் வரி வருவாய் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும் என்றும், இதனால் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்று நோமுரா நிறுவனம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.

Also Read: “இந்தியாவின் ஜிடிபி 7.3% இருந்து 6.1%ஆக குறைந்துள்ளது - ஐ.எம்.எப் கணிப்பு” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!