India

“5.6% குறைந்த ஜி.டி.பி”: மோடி ஆட்சியில் பொருளாதார மந்தநிலை நீண்ட காலம் நீடிக்கும்: - மூடிஸ் எச்சரிக்கை!

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது மதிப்பைக் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூடிஸ் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என கூறியிருந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி.டி.பி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 6 புள்ளிகளைக் குறைத்தது.

அதனையடுத்து, அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய கணிப்பிலிருந்த மதிப்பை 0.4 புள்ளிகள் குறைத்து 5.8 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு மதிப்பிட்டதை விட பொருளாதார வளா்ச்சியில் காணப்படும் தேக்க நிலை நீடிக்கிறது.

அதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முன்பு 5.8 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 5.6 சதவீதமாக குறைக்கப்படுகிறது” என மூடிஸ் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்தியாவுக்கான எங்கள் வளர்ச்சிக் கணிப்பை திருத்தி அமைத்துள்ளோம். 2018ல் 7.4 சதவீதமாக இருந்தது என்பதனை சுட்டிக்காட்டி, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, முன்பு எதிர்பார்த்ததை விட இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதே தெரிகிறது” என மூடிஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ‘மூடிஸ்’ நிறுவனத்தின் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கணிப்பு வெளியானதன் காரணமாக பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. மேலும் முக்கியத் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதுமட்டுமின்றி, “கடன் மதிப்பீட்டு தரநிலையில் எதிர்மறையான நிலைக்கு இந்தியா சென்றுள்ளதாகவும் இதன்மூலம் முதலீடுகள் குறையும்” என்று மூடிஸ் நிறுவனம் முன்பே எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.