India

2 ரூபாய்க்காக நடந்த கொலை... ஆந்திராவை நடுங்கச் செய்த அதிர்ச்சி சம்பவம்!

2 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆந்திராவில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வலசபாகலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்ணராஜூ. கட்டுமானத் தொழிலாளியான இவர் தனது சைக்கிள் டயர்களில் காற்றடிக்க வலசபகலாவில் உள்ள சம்பா என்பவரின் சைக்கிள் கடைக்குச் சென்றார்.

சுவர்ணராஜூவின் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொடுத்த சைக்கிள் கடைக்காரர் சம்பா காற்றடித்ததற்கான இரண்டு ரூபாயைக் கேட்டுள்ளார். அப்போது சுவர்ணராஜூவிடம் 2 ரூபாய் பணம் இல்லாததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில், சுவர்ணராஜூ சம்பாவை அடித்துள்ளார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சம்பாவின் நண்பர் அப்பா ராவ், கடையிலிருந்த ஒரு இரும்பு கம்பியைக்கொண்டு சுவர்ணராஜூவின் தலையில் அடித்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்த சுவர்ணராஜூவை உள்ளூர்வாசிகள் காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுவர்ணராஜூவை தாக்கி உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த சம்பா மற்றும் அப்பா ராவ் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்துள்ளனர். வெறும் 2 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.