India

3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த மாஞ்சா நூல் : தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்- 2 பேர் கைது!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது மனைவி சுமித்ரா மற்றும் 3 வயது மகன் அபிநோத் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஆர்.கே.நகரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, மீனாம்பாள்நகர் மேம்பாலத்தில் செல்லும்போது, காற்றாடி பறக்கவிடும் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தில் சிக்கியதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையின் தந்தை அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்ததாக கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து ஆர்.கே.நகர் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் உடலை பார்த்த போலிஸார், காற்றாடி விட்டவர்களை கண்டறிந்து, அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜன் ( வயது 20) மற்றும் 15 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.