India

பிழைப்பிற்காக ஆஞ்சநேயர் வேடமணிந்த முஸ்லிம் இளைஞரைத் தாக்கி போலிஸில் ஒப்படைத்த இந்துத்வா கும்பல்!

உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது பரேலி மாவட்டம். அங்கு பிரபல ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் முகமது நசீம் என்ற 19 வயது இளைஞர் வயிற்றுப் பிழைப்புக்காக அனுமார் போல் நீண்ட வாலுடன் வேடம் அணிந்து காணிக்கையை கேட்டு வந்தார்.

அப்போது அங்கு கோயிலுக்கு வந்த பஜ்ரங் தள் தொண்டர்கள் நசீமை பிடித்து விசாரித்தனர். பின்னர், நசீம் முஸ்லிம் என்பது தெரிந்ததும், ஒரு முஸ்லிம் ஆஞ்சநேயர் வேடமணிந்து பிச்சை எடுப்பது கடவுளை அவமதிப்பதாக உள்ளது எனக் கூறி அடித்து, அருகில் உள்ள சுபாஷ்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், அவரையும் ஒப்படைத்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட சுபாஸ்நகர் போலிஸார் விசாரித்ததில் நசீம் நாடகக் கலைஞர் என்றும், பிழைப்பதற்காக இதுபோல பல வேடமணிந்து பொதுமக்களிடம் பணம் பெற்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், ஆஞ்சநேயராக வேடமணிந்தது அன்றுதான் என்றும் தெரியவந்தது. பின்னர் புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி பஜ்ரங் தள் அமைப்பினரிடம் போலிஸார் கூறியதாவும், அதனை பஜ்ரங் தள் தொண்டர்கள் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

முகமது நசீம்

இதனையடுத்து, கோயிலுக்கு வரும் இந்து மதத்தினரை ஏமாற்றியதுடன், அவர்கள் நம்பிக்கைக்கு ஊறு விளைவித்து ஆள்மாறாட்டம் செய்ததாக நசீம் மீது மோசடி வழக்கை போலிஸார் பதிவு செய்து, பரேலி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், நசீம் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி போலிஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிழைப்பதற்காக சிறு சிறு வேடம் அணிந்து பிச்சை எடுத்துவந்த இளைஞர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.