India

டெல்லியில் பயணிக்க பெண்களுக்கு இனி கட்டணம் கிடையாது : இலவச திட்டம் இன்று முதல் அமல்!

டெல்லியில் அரசுப் பேருந்துகளில் அக்டோபர் 29ம் தேதி முதல் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அதன்படி, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் மாநிலம் முழுவதும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும் 40 லட்சம் பயணிகளில் 30% பேர் பெண்கள். பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் பாதுகாப்பான பயணத்தைப் பெற இயலாத ஏழைப் பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

டிக்கெட் வாங்கிப் பயணிக்க விரும்பும் பெண்கள் அப்படியே பயணம் செய்யலாம் எனவும், பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை சொந்தப் பணத்திலேயே பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் இலவச சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இதற்காக பெண் பயணிகளுக்கு பிங்க் நிற டிக்கெட் வழங்கப்பட்டது. டெல்லி அரசின் இந்தத் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக ஆம் ஆத்மி அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.