India

“பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாத அரசாக இருக்கிறது மோடி அரசு” : ரகுராம் ராஜன் சாடல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்த ரகுராம் ராஜன், பதவி விலகிய பின்னர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, “மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்துக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை.

குறிப்பாக, அரசின் அதிகாரங்கள் மற்றும் மிக அதிகமாக ஒரே இடத்தில் இருந்தனர். இதனால் வளர்ச்சி குறித்து தெளிவான பார்வை இல்லாமல் போனது. அதனால் தலைவர்கள்தான் அதிக அழுத்தத்திற்கு ஆளானார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களும் அதிகாரம் இல்லாதவர்களாக உள்ளார்கள். அரசு அதிகாரிகளும் முடிவை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை எடுக்க உறுதியான திட்டம் இல்லை.

இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவையே காரணம். சொல்லப்போனால்,பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாத அரசாக மோடி அரசு இருக்கிறது. அதன்விளைவால் தற்போது வளர்ச்சி குறைந்துவிட்டது.

மேலும் மக்களிடம் இருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கு, அரசு நலத்திட்டங்களை அதிகப்படுத்திக்கொண்டே போகிறது. நாட்டின் வளர்ச்சி கடும் நெருக்கடியில் இருக்கும்போது, இதுபோல செலவு செய்யக்கூடாது” எனக் கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், “அமைப்புகளின் - நிறுவனங்களின் பலவீனமாக்கல் மூலம் அரசு சர்வாதிகாரம் என்ற அபாயத்தை நோக்கி நகர்கிறது. லத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மைவாதக் கொள்கைகளின் வழியில் இந்தியா செல்லும் அபாயம் உருவாகியுள்ளது. சர்வாதிகாரிகளால் நிறுவனங்கள் பலவீனம் அடைகின்றனவா பலப்படுகின்றனவா என்பது முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.