India
நடுக்காட்டில் திருவாரூர் முருகன் பதுக்கிவைத்த 11 கிலோ தங்கத்தை மீட்டது பெங்களூரு போலிஸ் : பரபரப்பு தகவல்!
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியின் சுவற்றில் துளையிட்டு கிட்டத்தட்ட 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துள்ளது திருவாரூர் முருகனின் கொள்ளைக் கும்பல். இந்த கொள்ளை விவகாரத்தில் முருகனின் கூட்டாளிகள் ஏற்கெனவே தமிழக போலிஸாரிடம் சிக்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் கடந்த வாரம் சரணடைந்தான்.
திருவாரூர் முருகன் மீது பெங்களூருவில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவனை காவலில் எடுத்து பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விசாரணைக்காக முருகனை பெரம்பலூருக்கு அழைத்து வந்த பெங்களூரு போலிஸாருக்கு திருச்சி லலிதா ஜூவல்லரி தொடர்பாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பெரம்பலூரில் உள்ள காட்டின் மையப்பகுதியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை போலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
அந்த நகைகளை சோதித்துப் பார்த்ததில் லலிதா ஜுவல்லரியில் அவை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது உறுதியானது. நகைகளை கருப்பு பை ஒன்றில் வைத்து கோணிப்பையால் மூடப்பட்டு திருவாரூர் முருகன் மண்ணில் புதைத்து வைத்துள்ளான். முருகனை வைத்தே குழிதோண்டி நகைகளை போலிஸார் மீட்டுள்ளனர்.
அதில் 11 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள், அரை கிலோ வைர நகைகள், 37 கிராம் பிளாட்டின நகைகள் ஆகியவை முருகன் பதுக்கி வைத்திருந்த பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நடுக்காட்டில் இருந்து இந்த நகைகளை மீட்டெடுக்கும் காட்சிகளை பெங்களூரு போலிஸாரே வெளியிட்டுள்ளனர்.
க்ரைம் படங்களில்தான் இதுபோன்ற கொள்ளைக் கும்பல் தலைவன் செயல்படுவதைப் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கொள்ளையனின் பராக்கிரமங்களைப் பார்ப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சியில் நடத்திய கொள்ளையைப் போன்று சமயபுரத்திலும் கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் முருகன் கும்பல். அதுமட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் திருவாரூர் முருகன் கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது என பெங்களூரு போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!