India

“இந்தியாவில் வெகுவாக மோசமடைந்துவரும் காற்றின் தரம்” : நாசா வெளியிட்ட புகைப்படம் - காரணம் என்ன?

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமாக இருப்பதாக காற்றின் தரத்தை அறிய உதவும் குறியீட்டில் கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் வடமாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மாசுபாட்டிலிருந்து மிகவும் மோசமான மாசுபாடு என்ற நிலைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மோசமான மாசுபாடு குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (NASA) செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் 2018ம் ஆண்டுக்கான காற்றின் தரத்தையும் அக்டோபர் 2019ம் ஆண்டுக்கான காற்றின் தரத்தையும் ஒப்பிட்டுள்ளது.

வட இந்தியாவில் பல இடங்களில் அறுவடை விவசாய நிலங்கள் எரிந்து வருவதன் காரணத்தாலேயே அம்மாநிலங்களில் காற்றின் தரம் வீழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தசரா பண்டிகை சமயம் என்பதால் கடந்த ஐந்து நாட்களாக காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்றின் தரம் குறைந்து நச்சுப் புகை காற்றில் கலப்பதால் வட இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஐ.நா-வின் உலக சுகாதார அமைப்பின் வரம்பை விட 20 மடங்கு அதிகமாக தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் காற்று அதிகமாக மாசடைந்துள்ளது. வட கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் காற்றின் தரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.