India

“காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?” : பிறந்த மண்ணில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கேள்வி !

மகாத்மா காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரியும். இந்நிலையில், குஜராத்தின் காந்தி நகரில் அரசு உதவி பெறும் சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் உள்மதிப்பீட்டு தேர்வு நேற்று முன்தினம் நடந்துள்ளது. அப்போது மாணவர்களுக்கு தேர்வின் கேட்கபட்ட கேள்வித்தாளில், ‘‘காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்?” என்று கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கடும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

அதுமடுமின்றி, 12-ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித் தாளில்,‘‘உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவது பற்றியும், சட்டவிரோதமாக மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகள் குறித்தும் மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு புகார் அனுப்புதல்” என ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

இதில் என்னவென்றால், குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சமூக வலைதளங்களிலும்,, செய்திகளிலும் வெளியானதை அடுத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளும், மாநில உயர் அதிகாரிகளுக்கும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியின் கேள்வித்தாள் மிக ஆட்சேபகரமானவை. இது அவர்களாகவே தயாரித்த கேள்வித்தாள். இதற்கும் கல்வித்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.