India

“குடும்பத்தினர் கூட கைவிட்டனர்; கனவை நிறைவேற்றியது கேரள அரசு” - மூன்றாம் பாலின விமான ஓட்டியாக ஆடம் ஹாரி!

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் திருநம்பி ஆடம் ஹாரி. இந்தியாவில் உள்ள அணைத்து மூன்றாம் பாலினத்தவரும் எதிர்கொள்வதைப் போலவே தான் ஆடம் ஹாரியும் பிரச்னைகளை எதிர்கொண்டார். ஹாரி தனது குடும்பத்தாரால் வீட்டிலிருந்து, இரக்கமின்றி வெளியேற்றப்பட்டார்.

இதனால், தான் குழந்தைப் பருவம் முதல் கனவு கண்ட 'விமான ஓட்டி' ஆகும் வாய்ப்பு இனி கிடைக்காது என்று மனமுடைந்து விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த போது கேரள அரசின் சமூக நலத்துறை இவருக்கு உதவ முன்வந்தது.

ஆடம் ஹாரி விமான ஓட்டி பயிற்சி பெறத் தேவையான 23.34 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி, திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ் காந்தி அகாடமி ஃபார் ஏவியேஷன் டெக்னாலஜியில் 3 வருடப் படிப்பில் சேர வழிவகை செய்தது கேரள அரசு. இதனால், அவர் இந்தியாவின் முதல் திருநம்பி விமான ஓட்டி எனும் பெருமைக்குரியவராகிறார்.

சிவில் விமானப் போக்குவரத்து விதிப்படி, வணிக ரீதியான விமான ஓட்டி உரிமம் பெற விரும்புவோர், 200 மணிநேரத்திற்குக் குறையாமல் ஒரு தனியார் விமான ஓட்டியாகப் பணியாற்றியிருக்க வேண்டும். இத்தகுதியை ஹாரி கடந்த 2017ம் ஆண்டே அடைந்து உரிமமும் வாங்கிவிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆடம் ஹாரி, ''நான் எனது வாழ்வில் கண்ட துன்பங்களால், விமான ஓட்டி ஆகவேண்டும் என்ற சிறுவயதுக் கனவின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்நேரம், எனக்காக உதவ முன்வந்த கேரள அரசுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.