India

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்ததன் பின்னணி என்ன? - வெளியான ஆச்சர்ய தகவல்!

இந்தியா மற்றும் சீனாவின் இருநாட்டு உறவு குறித்து நாளை (அக்., 11) தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

இதனையடுத்து, இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்க்கவுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியா சீனா உறவு குறித்த பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார் என்ற பெரிய வினா மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக தற்போது தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மாமல்லபுரத்தில் மோடி, ஜின்பிங் சந்திப்பு இந்திய அரசால் முடிவு செய்யப்பட்டது என பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். உண்மையில் இந்த சந்திப்பை மாமல்லபுரத்தில் நடத்த முடிவெடுத்தது சீன அரசுதான்.

சீனாவின் வெளியுறவுத்துற அமைச்சராக உள்ள லுவா ஸாகுவிதான் தமிழகத்தின் மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார். லுவா ஸாகுவி இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதராக இருந்தவர்.

இவர், புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் உள்ள சீன கல்வியாளர் ஸு ஃபன்சங்கின் மாணவர் ஆவார். ஆரோவில்லில் தங்கி படித்ததால் இவருக்கு மாமல்லபுர நகர் மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கிறது.

அப்போது, தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையேயான பண்டையகால வணிகத் தொடர்பு குறித்து அறிந்து வைத்துள்ளார். ஆகையால் இந்திய-சீன உறவு குறித்து ஆலோசனை நடத்த ஏதுவான இடமாக மாமல்லபுரம் அமையும் என லுவா ஸாகுவி கூறியதன் பேரில் சீன அரசு மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளது.