India

பொருளாதார சரிவு எதிரொலி: பணத்தை செலவு செய்ய மக்கள் அச்சம் - ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்!

வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை 50 சதவிகித இந்தியர்கள் முற்றிலும் இழந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பணத்தை செலவு செய்வதும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நுகர்வோர் நம்பிக்கை குறித்து மாதந்திர ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. அதன் படி, கடந்த மாத நிலை குறித்து மும்பை, டெல்லி, சென்னை உட்பட இந்தியாவின் 13 பெருநகரங்களில் உள்ள 5200 குடும்பங்களில் ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியுள்ளது.

வேலை வாய்ப்பு, விருப்பச் செலவு, தனிநபர் வருமானம், தனி நபர் செலவு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பணத்தை செலவு செய்வதற்கான நம்பிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையால் அச்சமடைந்துள்ள மக்கள், பணத்தை செலவிடுவதற்கும் தயங்கி வருகின்றனர் என குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, கடந்த ஜூலை மாதம் இருந்ததை விட செப்டம்பர் மாதத்தில் இந்த நம்பிக்கையானது 6% குறைந்திருப்பதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மிக மோசமான வீழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு தொடர்பாக நம்பிக்கை தொடர்ந்து பூஜ்ஜியத்திற்கு கீழே உள்ளது போல், வருமானம் ஈட்டுவதிலும் பூஜ்ஜியத்துக்கு கீழான நம்பிக்கையே மக்கள் மனதில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.