India

திருடுபோன காந்தியின் அஸ்தி... சேதப்படுத்தப்பட்ட புகைப்படம் : பிறந்தநாளன்றே வன்மம் காட்டிய வெறுப்பாளர்கள்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் காந்திய சிந்தனைகளும், அவரது கருத்துகளும் நினைவுகூரப்பட்டன.

1948ம் ஆண்டு மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்டது. ஆனால் இந்து சமய வழக்கப்படி அது நதிகளில் கரைக்கப்படாமல், இந்தியாவில் உள்ள பல்வேறு 'காந்தி நினைவிடங்களுக்கு' அனுப்பப்பட்டது. அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள பாபு பவனும் ஒன்று.

பாபு பவனில் பாதுகாக்கப்பட்டுவந்த காந்தியின் அஸ்தி அவரது பிறந்தநாளன்றே திருடப்பட்டுள்ளது. பாபு பவன் நினைவக காப்பாளர் இரவு 11 மணிக்கு நினைவகத்தை மூட வந்தபோது, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கலசம் காணாமல் போயிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், காந்தியின் புகைப்படமும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அஸ்தியை திருடிய சமூக விரோதிகள், காந்தியின் புகைப்படத்துக்குக் கீழே ‘தேசத் துரோகி’ எனவும் எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, இதுகுறித்து ரேவா மாட்டத்தின் காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங் போலிஸில் புகார் அளித்துள்ளார். அஸ்தியை திருடியவர்களைக் கண்டுபிடிக்க, பாபு பவனில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, முஸ்லிம்களை காந்தி ஆதரித்தார் என்று இந்துத்வர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். அதுவே, காந்தி படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

மகாத்மா காந்தி மறைந்து 70 ஆண்டுகள் கடந்தும், இந்துத்வ வெறியர்கள் அவர் மீது மிகுந்த வன்மம் கொண்டிருப்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. காந்தியின் புனிதத் தளம் மீதான இந்தத் தாக்குதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.