India

“அரசாங்கம் விமர்சனங்களை ஒடுக்குவது தீய வழிமுறை” : ரகுராம் ராஜன் கருத்து!

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்த ரகுராம் ராஜன், பதவி விலகிய பின்னர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்நிலையில், “விமர்சனங்களை அடக்குவது ஒரு தீய செயல்முறை” என்று தனது லிங்க்டு-இன் பக்கத்தில் தொடர்பாக கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் “விமர்சனம் மட்டும்தான் காலத்திற்கேற்ற வகையில், அரசாங்கம் சரியான முடிவுகளை எடுக்க வழிவகை செய்யும். அதற்குப் பதிலாக அரசு அதிகாரி அல்லது ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் ட்ரோல் ஆர்மி மூலம், ஒவ்வொரு விமர்சகருக்கும் போன் கால் சென்றால், விமர்சனங்களை முன்வைக்கும் பெரும்பாலானவர்கள் தங்களின் விமர்சனங்களை குறைத்துக் கொள்வார்கள். அது ஆபத்தான போக்கு.

குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். துளியும் சந்தேகத்திற்கு இடமின்றி, பத்திரிகையாளர்கள் உட்பட சிலரின் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக அமையும், அது மோசமாகவும் சித்தரிக்கப்படும்.

ரகுராம் ராஜன்

நான் பணியாற்றும்போதே இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். இதுபோல விமர்சனங்களை ஒடுக்குவது தீய செயல்முறையாகத் தான் இருக்கும். அந்த தீய செயல்முறை கொள்கை முடிவுகள் எடுக்கும்போது எதிரொலிக்கும்.

விமர்சனம் தான் கொள்கைகளைச் சரி செய்ய அனுமதிக்கிறது. விமர்சனங்களை அடக்கும் அரசாங்கங்கள் தங்களைத் தாங்களே அவதூறு செய்வதற்கு ஒப்பானது” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மோடியின் பொருளாதாரக் குழுவில் இருந்து ரதின் ராய் மற்றும் ஷமிகா ரவி ஆகியோரை நீக்கியதற்கு அரசின் கொள்கைகள் மீது விமர்சனம் செய்ததனால் நீக்கப்பட்டதாக மறைமுகமாக ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.