India

கார்ப்பரேட்களுக்கு தாராளம் காட்டியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு புது திட்டம்!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதத்துக்கும் கீழே சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் உற்பத்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி கண்டிருப்பதால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மையும், வேலையிழப்பும் அதிகரித்துள்ளது.

ஆகையால், பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகித்தை குறைப்பதாக அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதேபோல் புதிதாக தொடங்கப்படவுள்ள நிறுவனங்களுக்கும் வரிச்சலுகைகளை அறிவித்தார்.

இந்த வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் வசமுள்ள உபரி நிலங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கான, பட்டியலை தயாரிக்குமாறு நிதி ஆயோக்கிடம் மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும், உபரி நிலங்களை விற்பதற்காக சர்வதேச ஆலோசனை நிறுவனத்தையும் நியமிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய பணிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அளித்தும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகளும் மற்றும் எதிர்க்கட்சிகளும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.