India

“மோடி ஆட்சியின் அடுத்த அவலம்”: 5 ஆண்டுகளில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை குறைந்தது : அதிர்ச்சி தகவல்!

பா.ஜ.க-வின் 5 ஆண்டு ஆட்சியில் கல்வி நிலையங்களை மேம்படுத்த எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல், அதற்கு மாறாக கல்வியில் இந்துத்துவா கருத்துக்களை புகுத்தும் வேலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு முறையாக வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகை வழங்குவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதமும் குறைந்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19-ம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை, கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 மாக குறைந்துள்ளது. இதே கால கட்டங்களில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீதமாகவும் உள்ளது. முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின்னர் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்கின்றனர்.

இந்த ஆய்வறிக்கையின் படி, தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 26.3 சதவீதமாக உள்ளது. இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

குறிப்பாக உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாகவும் பி.எஸ்.சி., பி.காம்., படிப்புகளுக்கு பிறகு பி.ஏ., பட்டப்படிப்பை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்வதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்வியை மேம்படுத்துவது குறித்தும் எந்த தெளிவான பார்வையும் பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பதே தெரிகிறது என கல்வியாளர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.