India

‘பப்ஜி’ விளையாட தடை விதித்த தந்தை : தலையைத் துண்டித்துத் கொலை செய்த மகன் : கர்நாடகாவில் கொடூரம்!

கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா குமார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான இவருக்கு 21 வயதில் ரகுவீர் என்ற மகன் உள்ளார். ரகுவீர் பப்ஜி (PUBG) மொபைல் கேமுக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் ரகுவீரை சங்கரப்பா அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ரகுவீர் தனது செல்போனில் ‘பப்ஜி’ விளையாடி உள்ளார். அவரிடம், ‘பப்ஜி’ விளையாடுவதை விட்டு வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளார் அவரது தந்தை. இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் உண்டானது. ஆத்திரமடைந்த ரகுவீர், அருகிலுள்ள வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கற்களால் தாக்கி உடைத்துள்ளார். இதுபற்றி அவர்கள் போலிஸில் புகார் அளித்ததால் ரகுவீரை போலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எச்சரித்து விடுவித்தனர்.

ஆனால், ரகுவீர் தொடர்ந்து ‘பப்ஜி’ விளையாடியதால் கடந்த ஞாயிறன்று மகனின் செல்போனை பறித்த சங்கரப்பா, இன்டர்நெட் சேவையை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர் அதிகாலை நேரத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்துவிட்டு, தனது தந்தையை கண்டம்துண்டமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரகுவீரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பப்ஜி கேம் விளையாடுவதைக் கண்டித்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.