India

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா அண்ணா பல்கலை? - தமிழர்கள் புறக்கணிக்கப்படும் அபாயம்!

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் போன்று, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தையும் சிறப்புமிகு கல்வி நிறுவனப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு சேர்க்கப்பட்டால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும்.

அண்ணா பல்கலைக்கழகம் சிறப்புமிகு கல்வி நிறுவனப்பட்டியலில் சேர்க்கப்பட்டால் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம், ஆசிரியர்கள் நியமனம், பாடத் திட்டம் உள்ளிட்ட எந்த விவகாரங்களிலும் தமிழக அரசு தலையிட முடியாது எனக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்குள் வரும் பல்கலைக்கழகங்கள் அதன் விருப்பப்படி அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான சுதந்திரங்கள் வழங்கப்படும் என்றும், பல்கலைக்கழக மானியக்குழு இந்தக் கல்வி நிறுவனங்களை சோதனை இடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சிறப்புமிகு கல்வி நிறுவனப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்காக தமிழக அரசின் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய அரசு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது. அவ்வாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டால் இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் பின் தங்கிய மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும்.

ஏற்கெனவே, கல்வி நிறுவனங்களில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த பா.ஜ.க அரசு திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது இந்தத் தகவல் வந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சிபிஎஸ்இ பள்ளியான கேந்திரிய வித்யாலாவில் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.