India

நிதி ஆயோக்கில் பணிபுரிந்த காஷிஷ் மிட்டல் IAS ராஜினாமா? : தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி காஷிஷ் மிட்டல். இவர் 2011ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். என்ஐடிஐ ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமாரின் கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்திற்கு பணிநிலை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் காஷிஷ் மிட்டல் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இந்த இடமாற்றம் காஷிஷ் மிட்டலுக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக அதிகாரிகள் சிலர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமின்றி காஷிஷ் மிட்டல் இடமாற்றம் செய்யப்பட்டது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகத் தொடர்புகொள்ள பத்திரிகைகள் காஷிஷ் மிட்டலை அணுகியபோது அவர் பதிலளிக்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கண்ணன் கோபிநாதன் | சசிகாந்த் செந்தில் | காஷிஷ் மிட்டல்

முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் நாட்டில் சுதந்திரமாக தனது கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவரையடுத்து “ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சமரசத்திற்கு பலியாகிறது” எனக்கூறி கர்நாடகாவைச் சேர்ந்த துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.