India

முதியவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து கடத்திக் கொலை செய்த வேலைக்காரன் : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

91 வயதான கிருஷ்ணன் கோஷ்லா எனும் முன்னாள் அரசு ஊழியரும், 87 வயதான அவரது மனைவியும் தெற்கு டெல்லியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கிருஷ்ணன் கோஷ்லா கடத்தப்பட்டதாக போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலிஸார் விசாரித்து வந்த நிலையில், வீட்டில் வேலைசெய்த கிஷன் என்பவன் வீட்டு உரிமையாளரைக் கடத்தியதாகத் தெரிய வந்தது. போலிஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியதில் கிஷன் பிடிபட்டான்.

பீகாரைச் சேர்ந்த கிஷன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டில் பணியாற்றி வந்துள்ளான். கிருஷ்ணன் கோஷ்லா வேலை வாங்கிய விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் கிஷன்.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன், கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து, சுயநினைவிழக்கச் செய்துள்ளான். பின்னர் 5 பேரின் உதவியோடு கிருஷ்ணனை ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து, டெம்போவில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளான்.

ஆறு பேர் சேர்ந்து குளிர்சாதனப் பெட்டியை டெம்போவில் ஏற்றும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. செக்யூரிட்டி கேட்டதற்கு, குளிர்சாதனப்பெட்டியை பழுதுபார்ப்பதற்காக தூக்கிச் செல்வதாகத் தெரிவித்துத் தப்பியுள்ளனர்.

பினன்ர், கிருஷ்ணனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலைப் புதைக்க சங்கம் விஹார் பகுதியில் ஒரு வீட்டில் ஆறு அடிக்குக் குழி தோண்டியுள்ளனர். அங்கு சென்று போலிஸார் உடலைக் கைப்பற்றினர்.

கிஷன் தவிர, தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபு தாயல் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் பணியாளால் முதியவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.