India

வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த மூதாட்டிக்கு ராகுல் செய்த உதவி!

கேரளாவில் கடந்த 8ம் தேதியில் இருந்து பெய்துவந்த கனமழையால் 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தான் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதிக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை புரிந்தார். வயநாடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து நிவாரணப் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

கேரள மக்கள் மத்தியில் பேசிய இடங்களில் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வயநாடு தொகுதி மக்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும், வெள்ளத்தின் போது சாதி, மதம், இனம், மொழி ஆகியவைகளைக் களைந்து ஒற்றுமையோடு செயல்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார் ராகுல் காந்தி.

ராகுல், கடந்தமுறை கேரளா வந்தபோது, கதீஜா கொல்லங்கட்டி எனும் மூதாட்டியைச் சந்தித்தார். அவர் தனது வீடு, உடைமைகள் யாவற்றையும் வெள்ளத்தால் இழந்தவர். ராகுலிடம் இதுகுறித்து அந்த மூதாட்டி தெரிவித்ததையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார் ராகுல்.

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த வெள்ளத்தால் வீட்டையிழந்த அந்த மூதாட்டிக்கு புதிய நிலத்திற்கான பத்திரத்தை வழங்கி மகிழ்வித்தார் ராகுல். அவருக்கான புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.