India

தேஜாஸ் எக்ஸ்பிரஸை இனி இந்திய ரயில்வே நிர்வகிக்காது? : பயணிகளுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?

பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்கு சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

தற்போது ஒருபடி மேலே சென்று பொதுத்துறையில் எடுத்த எடுப்பில் கைவைத்தால் தனியார் முதலாளிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்பதால் அந்தந்த பொதுத்துறையை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னோட்டம் பார்த்துக்கொள்ள அனுமதி வழங்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இதில் முதலாவதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையில் தனியார்மயத்திற்கு முன்னோட்டம் அளிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக தில்லி - லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் அகமதாபாத் - மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி-யிடம் (IRCTC இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) சோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “மோடி அரசின் இந்த நடவடிக்கை தனியாருக்கு ரயில்வே துறையை ஒப்படைப்பதற்கான சோதனை முயற்சியாகத்தான் பார்க்கிறோம். இதனால் ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்படும்.

மேலும் அந்த நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் விலையை உயர்த்தும். பாஸ் மூலம் பயணிக்கும் முறையும் ரத்து செய்வார்கள். இதனை செயல்படுத்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்தியன் ரயில்வே துறை மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்காது; அதற்கு மாறாக ஐ.ஆர்.சி.டி.சி நிர்வகிக்கும். இதனைத் தடுக்க ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.