India

கண்முன்னே காதலியை கடத்தி வன்புணர்வு செய்த 5 பேர் : காப்பற்ற முடியாத வேதனையில் தற்கொலை செய்துகொண்ட காதலன்

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் ஜூலை 13ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ” தற்கொலை செய்து கொண்ட இளைஞரும் அதே பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கிடையே அந்த பெண் இரண்டு மாத கர்ப்பம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது வீட்டில் பேசிவிடலாம் என முடிவு எடுத்து பன்ஸ்வாரா டவுனில் இருக்கும் இளைஞரின் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தனர்.

இரவு 10 மணியளவில் அங்கு வந்த இளைஞர்கள் மூன்று பேர் இவர்கள் வந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். அப்போது காதலனை இரு சக்கரவாகனத்தில் இருந்து இழுத்து கீழே தள்ளி இங்கிருந்து ஓடிவிடு என மிரட்டியுள்ளனர். அந்த இளைஞர் அங்கிருந்து ஓடாமல் நின்றதை அடுத்து, அவரை கற்களைக் கொண்டும், இரும்பு கம்பியாலும் கடுமையாக தாக்கி அவரின் செல்போனையும் பறித்துவிட்டு, அந்த பெண்ணையும் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார்கள்.

பின்னர் அந்த மூவரும் சேர்ந்து பெண்ணை கடுமையாகத் தாக்கி கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள். அத்தோடு விட்டுவிடாமல் அவர்களது கிராமத்திற்கே அந்த பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்களது நண்பர்கள் நரேஷ், விஜய் என்பவர்களை வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இரவு முழுவதும் அந்த பெண்ணை சித்திரவதை செய்துவிட்டு, மறுநாள் காலையில் சாலையில் வீசிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்கள்.

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது பெண்ணிற்கு கரு கலைந்து விட்டதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

பின்பு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தை வைத்து போலிஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அதில் ஒரு குற்றவாளி செல்போனை உபயோகிப்பது தெரியவந்து. பின்னர் அந்த சிக்னலை பின் தொடர்ந்து மூலம் குற்றவாளி வீட்டிற்கே போலிஸார் விரைந்தனர். அங்கு குற்றவாளி ஜிதேந்திராவின் மனைவி செல்போனை வைத்திருந்தார்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜிதேந்திரா, சுனில், விகாஸ் மற்றும் நரேஷ், விஜய் அகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை, கொலை வழக்கு, கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன், கடைசி வரை காதலியை காப்பாற்ற முடியவில்லை என்ற வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.