India
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை... வெள்ள பாதிப்புகளை பார்வையிட வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!
தென்மேற்குப் பருவமழை தொடக்கத்தில் சற்று குறைவாகப் பொழிந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரமடைந்து பலத்த மழை கொட்டி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியின் அவலாஞ்சியில் வரலாறு காணாத வகையில் 91 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்த மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்ததால் நிலச்சரிவு, வெள்ளம் என அம்மாநில மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்ற பேரிடரில் சிக்கி இதுவரை கேரளாவில் 42 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வயநாடு பகுதியே அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
வயநாடு மாவட்டத்தின் புதுமலாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதனையடுத்து, கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. ராகுல் காந்தி நாளை கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அம்மாநிலத்துக்குச் செல்லவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, வயநாடு தொகுதி மக்களுக்கும், கேரளாவின் பிற பகுதி மக்களுக்கும் தேவையான நிவாரணப் பணிகளை செய்யுமாறு காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!