India

NMC மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக்... அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு!

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் பா.ஜ.க அரசு தாக்கல் செய்தது.

இந்த மசோதா ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையிலும், தனியாருக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கங்கள் சார்பில், மருத்துவர்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

மருத்துவ ஆணையத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து பணி நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அவசர மருத்துவ சேவைகளும், பிரசவ சேவையும், உள் நோயாளிகள் பிரிவுகளும் இயங்கியது.

இந்த நிலையில், இன்று காலை 6 மணியுடன் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுற்றதால் அவசர சேவைகளோடு மற்ற அனைத்து மருத்துவ சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.