India

வடமாநிலங்களை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் : இடுப்பளவு நீரில் மிதக்கும் மக்கள்!

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளதால், பெரும்பாலான வடமாநிலங்கள் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் வடக்கு , கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் கன மழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

தெற்காசியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியா, நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையின் பல்வேறு இடங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 700 பயணிகள் தேசிய பேரிடர் மீட்புக்குழு உதவியால் மீட்கப்பட்டனர். மகாராஷ்டிராவின் பெரும்பாலான இடங்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளதால், மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அம்மாநில மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கோடா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 12 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்திலும் கனமழை தொடர்ந்து வருகிறது. அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 82க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.