India

இனி ரயில்களில் அன்ரிசர்வ் பெட்டிகளில் ‘சீட்’ ரிசர்வ் செய்யலாம்: ரயில்வே புதிய திட்டம் - எப்படி சாத்தியம்?

இந்திய ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்பது அனைவருக்கும் தெரியும். ரயில் புறப்படுவதற்கு பல மணி நேரம் முன்னரே ரயில் நிலையம் வந்து பொது பெட்டியில் இடம்பிடிக்க காத்திருந்து இடம் கிடைக்காமல் போன கதையும் பலருக்கு நிகழ்ந்து இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வே துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில் பயோமெட்ரிக் திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் இடங்களை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில், டிக்கெட் வாங்கியதும் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ததும் டோக்கன் ஒன்று வழங்கப்படும். அந்த டோக்கன்களில் உள்ள வரிசை எண் படி பயணிகள் நிறுத்தப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் டோக்கன்களை பரிசோதித்த பின் பயணிகள் பெட்டிக்குள் ஏற்றப்படுவார்கள். முதலில் வந்து டோக்கன் பெறுபவர்களுக்கே சீட் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகும் கைரேகைகள் மூலம் திருடர்களை அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வட இந்திய மாநிலங்களில் செயல்படுத்துவது சாத்தியமானதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.