India

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது-உத்தரகாண்ட் சட்டம் 

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது, பஞ்சாயத்து ராஜ் மசோதா 2019 என்ற மசோதாவை தாக்கல் செய்தது அம்மாநில பா.ஜ.க. அரசு. இந்த மசோதாவின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன் மீதான குரல் வாக்கெடுப்பு கூட்டத்தொடரின் போது நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு இடையே குரல் தேர்வு மூலம் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித்தகுதியையும் நிர்ணயித்து சட்டம் இயற்றியுள்ளது பா.ஜ.க அரசு. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது.

அதேபோல், கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோரில் எஸ்.சி/எஸ்.டி. ஆண் வேட்பாளர்கள் எட்டாம் வகுப்புக்கு மேலும் பெண் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 5ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்து 300 நாட்கள் கழித்து மூன்றாவதாக குழந்தை பெறுபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசின் உள்ளாட்சித் தேர்தல் மசோதா தொடர்பாக அரசியல் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், சட்ட இயக்கங்கள், நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாவது என்றால் நாட்டையே ஆளும் பிரதமரின் கல்வித் தகுதி பி.எச்.டி ஆக இருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.