India

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

தென்மேற்கு பருவக்காற்று அரபிக்கடல் பகுதியில் வலுவடைந்திருப்பதாலும், தெற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் மழை மேகங்கள் அதிகரித்து இருப்பதால், நடப்பு ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி, கேரளாவின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பருவமழை தொடங்கியதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக இயல்பைவிட 3-4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

சென்னையை பொறுத்தவரை மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் தற்போதுவரை இல்லை சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.