India

இலங்கைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

ஈஸ்டர் நாளன்று, இலங்கையில் தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில், 250க்கும் மேலான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும், தொடர் பதற்றத்தை தணிக்கும் வகையில் இலங்கையில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து சமூக வலைதள செயல்பாடுகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தற்போது இலங்கையில் சற்று பதற்றமும், பரபரப்பும் ஓய்ந்த காரணத்தால் அவசர நிலை உத்தரவை விலக்கிக்கொண்டு, கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது இலங்கை அரசு.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைச் செல்பவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதாவது, இலங்கையில் அமைதி நிலவினாலும், முழுமையாக ஆபத்து நீங்கவில்லை.

எனவே, அந்நாட்டுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பன்தொட்டா ஆகிய பகுதிகளில் உள்ள துணை தூதரகத்தையும் அணுகலாம் என கூறியுள்ளது. 24 மணிநேரமும் தூதரகம் செயல்படும் என்றும் கூடுதல் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.