India

மோடி, அமித்ஷா மீதான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்கு கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா மீது 37 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அந்தப் புகார்களின் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “ராணுவத்தின் பெருமைகளை பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய பெரும்பாலான பிரசாரங்களில் இராணுவத்தைப் பற்றித்தான் பயன்படுத்துகின்றனர்.

அதோடு, மதப் பிரச்னையைக் கிளப்பும் வகையில் அவர்களது பேச்சு உள்ளது. தேர்தல் நாளன்று, பேரணி நடத்தக்கூடாது என்ற விதியை மாறி, குஜராத்தில் வாக்குப்பதிவு செய்துவிட்டு, பேரணி நடத்தியுள்ளனர்.

மோடி மற்றும் அமித்ஷா மீது, பல புகார்கள் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.