India

டிக் டாக் தடை நீக்கம்? - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் போன்று வயது பாரபட்சமில்லாமல் அனைவர் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது டிக் டாக் செயலி.

டிக் டாக் மூலம் பலர் தத்தம் திறமைகளை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, சிலர் இதனை தவறாக உபயோகித்து ஆபாச பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூகத்தில் கலாசார சீர்கேடு ஏற்படுவதாக தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதனையடுத்து, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த தடை உத்தரவை எதிர்த்து டிக்டாக் செயலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தது. அதில் தங்களிடம் ஆலோசிக்காமலேயே மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்ததால் நாள் ஒன்றுக்கு சுமார் 4.5 கோடி வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டிக் டாக் செயலி மீதான தடை குறித்து வருகிற ஏப்.,24ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடிவெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஏதும் தெரிவிக்காவிடில் டிக் டாக் மீதான தடை நீக்கப்படுவதாக கருதப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.