DMK Government

“தி.மு.க கூட்டணி 177 இடங்களுக்கு மேல் வெல்வது உறுதி” - Times Now கருத்துக்கணிப்பில் வாக்களித்த மக்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

தி.மு.க தலைவர் உள்ளிட்ட கழக முன்னணியினர் வாக்கு சேகரிக்கும் இடங்களில் பொதுமக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர். இதற்கு மாறாக அ.தி.மு.க அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் பகுதிகளில் மக்கள் கருப்புக்கொடி காட்டுவது, வாக்கு சேகரிக்க அனுமதி மறுப்பது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க கூட்டணி 46% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 34.6% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட சரிபாதி பேர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர். அ.தி.மு.க அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பது இக்கருத்துக்கணிப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.

முன்னதாக, ஏபிபி-சி வோட்டர், லயோலா ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே வெகுவான அதிருப்தி நிலவுவதாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துச் செயல்படுவதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: “ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!