Election 2024
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !
கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியின் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna), ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். கடந்த ஏப்.26-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும், பணிப்பெண்களை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பல பெண்களையும் மிரட்டி தனது பாலியல் ஆசைக்கு இணங்குமாரு பிரஜ்வல் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியதோடு, மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்றுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று JDS கூட்டணி கட்சியான பாஜகவும் அறிவித்துள்ளது அரசியல் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து பிரஜ்வல் மீது போலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் மீதும் அவரது தந்தை HD ரேவண்ணா மீதும் பணிப்பெண் ஒருவர் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக பாலியல் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில், அவரை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இத சூழலில் பிரஜ்வலின் ஆபாச வீடியோ தொடர்பான பென் டிரைவை, பாஜக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் தான்தான் கொடுத்ததாக, பிரஜ்வலின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
தொடர்ந்து பிரஜ்வலின் பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாடு சென்றுள்ள பிரஜ்வலை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஹாசன் தொகுதி எம்.பி-யும் NDA கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பிரஜ்வல் பாலியல் விவகாரம் குறித்து சர்வதேச அளவில் செய்தியாக வெளியிடப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!