Election 2024

தேர்தலில் வெறுப்பு பிரசாரம் : மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய வழக்கு... விசாரணை எப்போது ?

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கும், பாஜக வேட்பாளர்களுக்கும் ஆதரவாக மோடி பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிகளின்படி சாதி, மதம் சார்ந்த பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது.

ஆனால் மோடியும், பாஜகவினரும் மதம் சார்ந்து மட்டுமின்றி, வெறுப்புணர்வை விதைக்கும் விதமாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் இராமர் கோவில், இந்து மதம் உள்ளிட்டவையை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். உத்தர பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட மோடி இந்து மதம், சீக்கிய மதம் குறித்து பிரசாரம் மேற்கொண்டார்.

எல்லாவற்றுக்கு மேலாக போய் அண்மையில், ராஜஸ்தானில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் பேச்சையும் பேசினார். மோடியின் இந்த பிரசாரத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மோடியின் இந்த பேச்சு மக்கள் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், மதம் சார்ந்து பிரசாரம் மேற்கொள்ளும் மோடிக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். கடந்த 15-ம் தேதி தொடரப்பட்ட இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோந்தலே தொடர்ந்த இந்த வழக்கு, நாளை நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Also Read: இந்த தொகுதியை தக்கவைக்க முடியுமா? : சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க லடாக் MP ஆதங்கம்!