Election 2024

ரூ.4 கோடி விவகாரம்... சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நயினார் : ED-க்கு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு !

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்து, 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா பரிசுப்பொருட்கள் வழங்குவது தடுக்கும் நோக்கில், ஆஙகாங்கே தேர்தல் பறக்கும் படையினர், போலீசார், அரசு அதிகாரிகள் என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இந்த சூழலில் கடந்த ஏப்.6-ம் தேதி இரவு, தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு இரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது.

மேலும் இதில் சதீஷ் என்பவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளது கண்டறியப்பட்டதோடு, அந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரூ.2 லட்சம் பணம், வேஷ்டி - 100, நைட்டி - 44, ஃபுல் பாட்டில்- 25, டின் பீர்- 16 ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி பா.ஜ.க. மாநில தொழில்துறை பிரிவு துணைத்தலைவர் கோவர்தனன் உள்பட 4 பேருக்கு தாம்பர பெருநகர காவல்துறை சம்மன் அனுப்பியது.

இதையடுத்து இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியான பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நயினார் நாகேந்திரன் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. தன்னால் ஆஜராக முடியாது என்று கூறி, தனது வழக்கறிஞர் மூலம் இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார் பாஜக வேட்பாளர் நயினார்.

Also Read: மன்னிப்பு கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம் : என்ன காரணம்?