Election 2024
“ஏப். 19 விடுமுறை இல்லையென்றால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்...” - தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த கையோடு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதுவும் கொடுக்க கூடாது, அளவுக்கு அதிகமாக மது பாட்டில்கள் வெளியே எடுத்துச்செல்ல கூடாது, குறிப்பிட்ட தொகையை கையில் வைத்திருந்தால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பல விதிகள் உள்ளன.
இந்த நிலையில், தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் பேசியாதாவது, “தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால், அதற்கு முந்தைய நாளான 18-ம் தேதியே புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் ஊழியர்கள் 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். தேர்தல் பரப்புரையானது வரும் 17-ம் தேதி மாலையுடன் நிறைவடையும். பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணியும் நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் நாளை ஒருநாள் தபால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது. இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!